Rock Fort Times
Online News

தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து நீக்கம்: த.வெ.க.வில் இணைய திட்டம்?

கொங்கு மாவட்டமான ஈரோட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தோப்பு வெங்கடாசலம். பெருந்துறை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அமைச்சராகவும் பணியாற்றினார். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தோப்பு வெங்கடாச்சலத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து 2021ம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தி.மு.க.வில் அவருக்கு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரிடம் தோப்பு வெங்கடாச்சலம் தோல்வி அடைந்தார்.
தோப்பு வெங்கடாச்சலத்திற்கும், முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு முத்துசாமியும் காரணம் என தோப்பு வெங்கடாச்சலம் குற்றம் சாட்டியதாக தகவல் வெளியானது.
மேலும், திமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தார்.

நீக்கம், 

இந்தநிலையில் அவர் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வகிப்பார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட
தோப்பு வெங்கடாசலம் த.வெ.கவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்