Rock Fort Times
Online News

திருச்சியில் துணிகரம்: கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு!

திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவர். இந்த கோவிலை உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரை சேர்ந்த கண்ணன் (வயது 50) என்பவர் பராமரித்து வருகிறார். இவர் வழக்கம்போல் கடந்த 30-ம் தேதி இரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று இருந்தார். அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது கோவிலின் வெளி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் பிரகாரம் அருகில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம், காசுகள் சிதறி கிடந்தன. இதுகுறித்து தில்லை நகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் உண்டியலில் இருந்த, சுமார் ஆயிரம் ரூபாய் திருட்டு போய் இருக்கலாம் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்