கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் ஆடி மாதத்தில் காற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆடி மாதத்தில் காற்று இல்லை, மாறாக வெயிலே கொளுத்தி வந்தது. அந்த வகையில் திருச்சியில் கடந்த பல நாட்களாக குறைந்தபட்சம் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இதனால், பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டுனர்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் நேற்று மாலை வானில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் இரவு 8 மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. திருச்சி கிராப்பட்டி உள்பட ரயில்வே சுரங்கப்பாதைகளில் ஒரு ஆள் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இந்த மழையின் காரணமாக இரவு நேரத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. பல நாட்களாக வெயிலின் கொடுமையில் சிக்கித் தவித்த மக்களுக்கு இந்த திடீர் மழை சற்று ஆறுதலாக அமைந்தது.இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 62-வது வார்டு கீழ பஞ்சப்பூர் ஊரணி தெருவில் சாலைகள் குண்டும்-குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி குட்டைபோல காட்சியளிக்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.