திருச்சி, மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் எல்ஃபின் என்கிற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இரண்டு சகோதரர்கள் இந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தின் கீழ் பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. பணம் இரட்டிப்பு, வெளிநாடு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து அந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. அவர்களின் ஆசை வார்த்தையை நம்பி அந்த நிறுவனத்தில் ஏராளமான மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் மூலம் பல கோடி ரூபாய் குவிந்தது. ஆனால், முதிர்ச்சி காலம் முடிந்த பிறகும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார்கள் அளித்தனர். புகார்களின் அடிப்படையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிந்து முக்கிய நிர்வாகிகளை கைது செய்தனர். இந்நிலையில் எல்ஃபின் நிறுவனத்தின் முக்கிய ஏஜெண்டுகளில் ஒருவராக இருந்த கரூரை சேர்ந்த வினோத்குமார் (47) என்பவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். இவர் திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.20 கோடிக்கு மேல் பணம் வசூல் செய்து கொடுத்தது தெரிய வந்துள்ளது. இவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தலைமுறைவாக இருந்தார். தற்போது அவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.