மஹா கும்பமேளாவை முன்னிட்டு உ.பி.பிரயாக்ராஜ் நகரம் விழாக்கோலம் பூண்டது- லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்..!
உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், மஹா கும்பமேளா இன்று முதல் பிப்.,26 (மஹாசிவராத்திரி) வரை நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதால் கும்பமேளா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மிகப்பெரிய ஆன்மிக கலாசார விழாவான இந்த மஹா கும்பமேளா தொடர்ந்து, 45 நாட்கள் நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு தீவிரமாக செய்துள்ளது. கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை ஹிந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள். பல்வேறு ஆன்மீக, கலாசார மற்றும் சுற்றுலா அம்சங்களுடன் ஒரு பெரிய கொண்டாட்டமாக இவ்விழா திகழ்கிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.’மஹா கும்பமேளாவானது இந்தியாவின் பண்டைய கலாசார மற்றும் மத மரபுகளை உலகளாவிய முக்கியத்துவத்திற்கு உயர்த்தும்,” என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ”இந்நிகழ்வு இந்தியாவின் வளமான ஆன்மீக மற்றும் கலாசார மரபுக்கு சான்றாக விளங்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தங்கள் பண்டைய மரபுகள் மற்றும் கலாசார வேர்களுடன் மீண்டும் இணையும் வாய்ப்பை மஹா கும்ப நிகழ்வு வழங்குகிறது. இது தெய்வீகமானதாக இருக்கும். உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவதால் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தூய்மை, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளுக்காக நவீன நகரத்தை ஏற்படுத்தியுள்ளோம். பக்தர்களுக்கான வசதியை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் சுற்றுலா வரைபடம் பெரிதும் உதவும். கழிப்பறைகளின் தூய்மையை கண்காணிக்கவும் உதவும். அதே நேரத்தில் ஸ்மார்ட்போன்களுடன் ஒருங்கிணைந்த ஏ.ஐ., இயங்கும் பாதுகாப்பு அமைப்பும் உதவும்,” என்றார்.
Comments are closed.