திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரைத் தோ் திருவிழா கடந்த ஏப்ரல் 30-ந் நேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மே 1-ந் தேதி காலை 10.45 மணிக்கு மேல் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து மே 2-ந் தேதி சுவாமி- அம்பாள் கிளி வாகனத்திலும், 3-ந்தேதி பூதம், கமல வாகனத்திலும், 4-ந் தேதி கைலாசபர்வதம், அன்ன வாகனத்திலும் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 5-ந் தேதி காலை நூற்றுக்கால் மண்டபத்தில் செட்டிப்பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றிரவு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா வந்தார். 6-ந் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அன்றிரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேர் திருவிழா இன்று(09-05-2025) நடைபெற்றது.தேர் திருவிழாவில் பள்ளிகல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் சிவசிவ , சிவசிவ… ஆரூரா,ஆரூரா… கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழக செயலாளர் மோகன், கவுன்சிலர் மணிமேகலை ராஜபாண்டி மற்றும் மலைக்கோட்டை சுவாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கருணாநிதி, ஸ்ரீதர், கோவிந்தராஜ், கலைச்செல்வி, 13- வது வார்டு திமுக வட்டச் செயலாளர் சங்கர் மற்றும் 14 வது வார்டு அதிமுக கவுன்சிலர், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் அரவிந்தன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நாளை10-ந் தேதி நடராஜர் தரிசனமும், தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இரவு வெள்ளி ரிஷப மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது. வருகிற 11-ந் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலாவும், 12-ந் தேதி மாலை 5 மணிக்கு தாயுமான அடிகள் உற்சவமும், 13ந்தேதி இரவு பிச்சாடனார் திருவீதி உலாவும், 14-ந் தேதி இரவு சண்டிகேசுவரர் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed.