முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட ஸ்ரீரங்கம் என்.ஆனந்திற்கு திமுகவில் மாநில பொறுப்பு !
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாநில துணைச் செயலாளர்களான பொன்.கவுதம சிகாமணி, ஜே.எல்.ஈஸ்வரப்பன், நெல்லை வே.நம்பி ஆகியோர் இரண்டு கட்சிப் பொறுப்புகளை வகித்து வருவதால், அப்பொறுப்பிலிருந்து அவர்கள் அனைவரையும் விடுவித்து, அதற்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளரரான துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச்செயலாளர்களாக மொத்தம் 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் திருச்சி மத்திய மாவட்ட திமுகவைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் என். ஆனந்திற்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ம்ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர்தான் ஆனந்த். அல்லித்துறையை அடுத்துள்ள சாந்தபுரத்தை சேர்ந்தவர். பி.எஸ்.சி பட்டதாரியான இவர் விவசாயத்தை தொழிலாக செய்து வருகிறார். இவருக்கு சௌமியா என்ற மனைவியும் இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2001ம் ஆண்டிலிருந்து திமுகவில் கட்சிப்பணியாற்றி வருபவர். தொடக்கத்தில் சாந்தபுரம் கிளைக்கழக செயலாளர் பொறுப்பு வகித்துவந்த இவர், 2012ம் ஆண்டிலிருந்து திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில்தான் திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச்செயலாளராகும் வாய்ப்பு ஸ்ரீரங்கம் ஆனந்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சக கட்சி நிர்வாகிகள் இவரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.