தமிழகத்தில் சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி முடிந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனைதொடர்ந்து மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடந்தது. அதுவும் தற்போது நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப் பட்டதாக தெரிகிறது.
அதன்படி, தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவு மே 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிபடுத்தி உள்ளார். பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே அதாவது 8-ந்தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.