Rock Fort Times
Online News

தனிப்படை போலீசார் அதிரடி வேட்டை : திருச்சியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 14 ரவுடி கும்பல் கைது – முக்கிய புள்ளியை கொல்ல சதி திட்டம் தீட்டியது அம்பலம் !

தேனி மாவட்டம் குமுளியை சேர்ந்தவர் ராஜ்குமார்.  இவர் கடந்த 2010 ம் ஆண்டு  தேவேந்திர மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நிறுவி, அதன் நிறுவனத் தலைவராக இருந்து வருகிறார்.  கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கோவை  மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இவர் மீது 5க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.  ராஜ்குமார் தனது கூட்டாளிகளின் துணையோடு கொலை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து  பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இவர் மீது தென் மாவட்டங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் வருகிற 30ந் தேதி  நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அந்த சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை ராஜ்குமார் கொலை செய்ய திட்டமிட்டதாக உளவுத்துறைக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜ்குமார் தனது நண்பர் பாலசுப்பிரமணியத்துடன்  திருச்சி பெட்டவாய்த்தலை அருகே  காரில் வந்த போது போலீசார் இவர்களது காரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.அதில் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், 2 வீச்சு அரிவாள்கள்,  25 நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதையடுத்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .மேலும் இவர்களின் ஆதரவாளர்கள் மாகாளிக்குடி அலெக்ஸ்,  அருண்,  சமயபுரம் ராமு,தொட்டியம் பகுதியை சேர்ந்த சக்திவேல், குளித்தலை பொன்னடி, சங்கீத்குமார் ,சோமசரசம்பேட்டையை சேர்ந்த கோபி உள்ளிட்ட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 14 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளது திருச்சியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்