Rock Fort Times
Online News

கைது செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்…!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருபவர் கேரளாவை சேர்ந்த அஜிதா. இந்த சென்டரில் திருச்சி விபசார தடுப்பு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தர விபசார தடுப்பு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ரமா, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அஜிதா, தற்போது அவ்வளவு பணம் இல்லை, ரூ.3 ஆயிரம் தருகிறேன் என கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்பேரில், அஜிதாவிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை ரமா பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். மேலும், ரமாவின் இரு சக்கர வாகனத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இந்த பணம் எப்படி வந்தது என்று கேட்டபோது அவர் முறையான பதில் சொல்லவில்லை. ரமா  திருச்சியில் உள்ள அனைத்து அழகு நிலையங்களில் இருந்தும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கூகுள் பே மூலம் வசூலித்தது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்