ஹரியானா மாநிலம் மஹேந்தர்கரில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹேந்தர்கர் மாவட்டத்தில் உள்ள உன்ஹானி கிராமம் அருகே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், பலியான குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், ஜிஎல் பப்ளிக் பள்ளி என்ற தனியார் பள்ளிக்குச் சொந்தமான வாகனம் தான் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகவும், பள்ளிப் பேருந்து மரத்தின் மீது மோதியதன் காரணமாக பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது என்றும் மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இன்று ரம்ஜான் பண்டிகையை அடுத்து அனைத்து இடங்களிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாளில் பள்ளி இயங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.