Rock Fort Times
Online News

திருச்சி மாநகரில் – கேள்விக்குறியாகும் சுகாதாரம்? இதே நிலை தொடர்ந்தால் போராட்டம் தான் தீர்வு- அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிக்கை…!

திருச்சி மாநகரின் தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்த்ததால் மாநகரின் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. நிலைமை இப்படியே நீடித்தால் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என, திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் ப.செந்தில்நாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது., கடந்த 2015ம் ஆண்டு இந்திய அளவில் தூய்மை நகரங்களின் பட்டியலில் திருச்சி இரண்டாவது இடத்தில் இருந்தது. அப்போது மாநகர தூய்மை பணிகளில் எந்த தனியார் நிறுவனமும் ஈடுபடவில்லை. ஆனால் 2023ம் ஆண்டு தூய்மை நகரங்களின் பட்டியலில் திருச்சி 112 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதற்கு மாநகரில் சுத்தம் -சுகாதாரத்தை சரியாக பேணாததே காரணம். முன்பெல்லாம் திருச்சி மாநகராட்சி நேரடியாக இப்பணிகளை நிர்வகித்து வந்த போது, ஒவ்வொரு வார்டிலும் மக்களுக்கு நன்கு அறிந்த பழக்கப்பட்ட ஒரு மேஸ்திரி இருப்பார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் மக்கள் அவரை நாடுவர். ஆனால் இன்று தனியார் நிறுவனங்களால் அந்த பிணைப்பு உடைபட்டு, எந்தப் பணிகளுக்கு யாரை தொடர்பு கொள்வது என்று மக்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டால் சரிவர பதில் கிடைப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கும் இதற்கும் பொறுப்பில்லை என்று தங்களது உயர் அதிகாரிகளை கை காட்டுகிறார்கள்.

இதனால் பல வார்டுகளில் தூய்மை பணிகள் தேங்கி நிற்கின்றன.துப்புரவு பணியாளர்களும் தங்களுக்கு நியாயமாக கிடைக்கக்கூடிய போனஸ் உட்பட சலுகைகளை கூட போராடித் தான் பெறுகிறார்கள். இதேபோல நமது காவிரி நீரை விநியோகிக்கும் பொறுப்பையும் கூட வெளி மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தது எந்த விதத்தில் பொது மக்களுக்கும் ஊழியர்களுக்கும் பலன் என்று தெரியவில்லை. மக்களின் வரிப்பணத்திலும் பணியாளர்களுக்கு செல்ல வேண்டிய சம்பளத்திலும் லாபம் ஒன்றே இலக்கு என்கிற குறிக்கோளுடன் இயங்கும் தனியார் நிறுவனங்கள் இனிமேலும் நமக்கு தேவைதானா? என்பதை திருச்சி மாநகராட்சி சீர்தூக்கி பார்க்க வேண்டிய கட்டாயமான நிலை உள்ளது. எனவே மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் இப்போதுள்ள பிரச்சனைகளை களைந்து மழை நீர் வடிகால்கள் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இதே துர்பாக்கிய நிலை தொடருமானால் அமமுக, திருச்சி மாநகர மக்களுடன் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்