“கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்”…* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..!
தமிழக முன்னாள் முதலமைச்சர், மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் 124-வதுபிறந்தநாளை ஒட்டி திமுக தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம். மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர். பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர். உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர். அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி. அவரது வழியிலான நமது திராவிட மாடல் அரசிலும்,
காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம், பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்குத் திருவுருவச் சிலை, திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் எனப் பெருந்தலைவரின் புகழ்போற்றும் அரசினை நடத்தினோம். தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.