சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றாததால் தமிழகத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு- திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம்…!
திருச்சி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் மாணவர்களிடையே
உரையாற்றுகையில், இளைஞர்கள் இன்று சோசியல் மீடியாவை பின்பற்றுகிறீர்கள். இதில் பல தகவல்கள் உங்களுக்கு கிடைக்கிறது. நாங்கள் படிக்கும் பொழுது அப்படி இல்லை. சாலை விபத்துகளை தவிர்ப்பதற்கு ஹெல்மெட் அணிய வேண்டும், மூன்று பேர் வாகனத்தில் செல்லக்கூடாது, குடிபோதையிலும், செல்போன் பேசிக் கொண்டும் வாகனத்தை இயக்கக் கூடாது, ரேசில் ஈடுபடக்கூடாது. சாலை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விபத்துகளை தவிர்ப்பதற்கு 18 வயது நிறைந்தவர்கள் மட்டுமே ஓட்டுனர் உரிமம் பெற்று வாகனங்களை இயக்க வேண்டும். சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றாததால் தான் இந்திய அளவில் சாலை விபத்துக்கள்
அதிகரித்து வருகிறது. சாலை விபத்துகளால் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்த உயிரிழப்பு தற்போது இரண்டு லட்சமாக உயர்ந்துள்ளது. அதில், தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 20,000 பேர் உயிரிழக்கின்றனர். தமிழக அளவில் நடைபெறும் சாலை விபத்துகளில் முதல் மூன்று இடங்களில் திருச்சி மாவட்டமும் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்தில் நாள்தோறும் ஒருவர் உயிரிழக்கிறார்.
மாணவர்களாகிய நீங்கள் உடல் நலத்தை பேண வேண்டும். குட்கா போதைப்பொருட்கள், மதுபானம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.
மாணவர்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியமோ உடல் ஆரோக்கியமும், பழக்க வழக்கமும் முக்கியமாகும் என்றார். இந்த நிகழ்ச்சியில் துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தமிழ்செல்வம், ஆயுதப்படை டிஎஸ்பி நவநீதகிருஷ்ணன், திருவெறும்பூர் பொறுப்பு டிஎஸ்பி நீலகண்டன், திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன், பெல் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, போக்குவரத்து பிரிவு போலீசார் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியானது ஜிபிடி கல்லூரி வளாகத்தில் தொடங்கி அண்ணா வளைவு, திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று மீண்டும் பாலிடெக்னிக் கல்லூரியை வந்தடைந்தது. அப்போது அவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை துவாக்குடி போக்குவரத்து ஆய்வாளர் தாமஸ் செய்திருந்தார்.
Comments are closed.