சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கைகள் செலுத்துகின்றனர். அந்த காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் இரண்டாவது முறையாக கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், காணிக்கையாக ரூ.1 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 655-ம், 2 கிலோ, 361 கிராம் தங்கமும், 4 கிலோ 657 கிராம் வெள்ளியும் மேலும், 111 அயல் நாட்டு பணம் மற்றும் 514 அயல் நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.