கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிபாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் புஷ்பநாதன் (45). அதிமுக மாவட்ட பிரதிநிதியான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் புஷ்பநாதன் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில்
புது வண்டி பாளையம் சூரசம்ஹாரத் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். உடனே, புஷ்பநாதன் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார். ஆனால், அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. உடலில் பல இடங்களில் வெட்டுப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்த தகவலின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புஷ்பநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புஷ்பநாதன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் புஷ்பநாதனை கொலை செய்தவர்களை உடனே கைது செய்யக்கோரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கடலூர் டிஎஸ்பி பிரபு பேச்சுவார்த்தை நடத்தி இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து புஷ்பநாதனை கொலை செய்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். புஷ்பநாதன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது கட்சி பிரச்சனை காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.