நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (ஏப்.16) காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா, மக்களவைத் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏப்ரல் 18- ம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் மேற்கண்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இந்த மசோதாவுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதலே தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார். அந்தவகையில், இன்று தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி
ஏற்றுமாறு திமுக தலைமை அழைப்பு விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருப்புச்சட்டை அணிந்தவாறு கொடிக்கம்பத்தில் கருப்புக்கொடியை ஏற்றி வைத்து, மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவின் நகலை எரித்து, “போராடும் போராடும்… தமிழ்நாடு போராடும்…..வெல்வோம் ஒன்றாக….” என்று முழக்கமிட்டார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.