Rock Fort Times
Online News

தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம்: 27- வது வார்டில் மேயர் மு.அன்பழகன் பங்கேற்பு…!

தேசிய வாக்காளர் தினமான இன்று(25-01-2025) திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி, 5- வது மண்டலத்துக்குட்பட்ட 27 – வது வார்டு மூலைக்கொல்லை தெரு மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்தக் கூட்டத்தில் , மூலக்கொல்லைத் தெரு, வள்ளுவர் தெரு, சவேரியார் கோவில் தெரு, மல்லிகைபுரம், ஜெனரல் பஜார் , வண்ணாரப்பேட்டை,ஜெனரல் பஜார், பென்சனர் தெரு, தென்னூர், பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர். பொதுமக்கள் அளித்த 52 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என மேயர் தெரிவித்தார். முன்னதாக,
மேயர் மு.அன்பழகன் 27-வது வார்டு பகுதியில் முடிவுற்ற திட்ட பணிகளையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். இதேபோல மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மேலும் ,மாநகராட்சி மைய அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி மொழியை மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். இந்நிகழ்வில் ஆணையர் வே.சரவணன், துணை ஆணையர் க.பாலு, நகர்நல அலுவலர் விஜய சந்திரன், உதவி ஆணையர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்