Rock Fort Times
Online News

திருச்சி மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் ஊர்வலம் அமைச்சர் கே.என்.நேரு,தலைமையில் நாளை நடக்கிறது!

தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவுநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் கே.என் நேரு தலைமையில் நாளை ( ஜன.25 ) மௌன ஊர்வலம் நடக்கிறது. இதுதொடர்பாக திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி என்.தியாகராஜன் மற்றும் மத்திய மாவட்ட திமுக செயலாளர் கே.வைரமணி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது., அன்னை தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திடும் வகையில் நாளை சனிக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் வீரவணக்க நாள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. திருச்சி தில்லைநகர் கோகினூர் தியேட்டர் அருகிலிருந்து புறப்பட்டு தென்னூர் உய்யக்கொண்டான் கரையில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் கல்லறை சென்றடைந்து அங்கு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படும். இந்த மௌன ஊர்வலத்தில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, தலைமை தாங்க இருக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட செயலாளர் க. வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் ந. தியாகராஜன் மேயர் மு.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்க இருக்கின்றனர். தொடர்ந்து தென்னூர் உழவர் சந்தை அருகில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. . இந்த வீரவணக்க நாள் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்