சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு- கண்காணிப்பு குழு என்ன செய்கிறது?
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி முதல் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜன. 19 வரை 6 நாள்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு ஜன. 11 சனிக்கிழமை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வேலை நிமித்தமாக சென்னையில் தங்கி உள்ளவர்கள், பள்ளி கல்லூரிகளில் படிக்கும் வெளியூர் மாணவ- மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் ரயில்களில் ரிசர்வேஷன் முடிந்துவிட்டது. அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளிலும் இருக்கைகள் ரிசர்வேஷன் செய்யப்பட்டு உள்ளன. இதனால், தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் ஆம்னி பேருந்துகளை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சகட்டுமேனிக்கு கட்டணத்தை உயர்த்தி வசூலித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ரூ.4000 வரையிலும், மதுரைக்கு ரூ.3,800 வரையிலும், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ.3500 வரையிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கட்டணத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளில் புக் செய்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால் இந்த கட்டணம் மேலும் உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பேருந்துகளில் வரி நிலுவை, அதிக சுமை, அதிக கட்டணம், பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும், 30 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவர். ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் இருந்தால், அபராதம் விதிப்பது, ‘பர்மிட் சஸ்பெண்ட்’ போன்ற நடவடிக்கைகளை எடுப்பர் என்று போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்து உள்ளது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆம்னி பேருந்துகளில் விமான கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கிறார்கள். இதுகுறித்து கண்காணிப்பு குழு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.