Rock Fort Times
Online News

மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்…!

எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் முறை, அதனை விநியோகிக்கும் முறைகளில் புதிய விதிமுறைகள் மே 1 முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மீதான அமெரிக்கா தாக்குதல் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால், ஏற்கனவே சிலிண்டர் முன்பதிவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மே 1ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. ஈரான் – அமெரிக்க போர் தொடங்கிய பிறகு, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்தது. வணிக சிலிண்டர்கள் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டது. அதாவது ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.196 முதல் ரூ.218 வரை நகரங்களுக்கு ஏற்ப விலை உயர்ந்தது. அதாவது, ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்து, அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய நகரங்களில் குறைந்தபட்சம் 21 நாட்கள் என்று இருந்தது தற்போது 25 நாட்களாக உயர்த்தப்பட்டது. கிராமப் பகுதிகளில் இது 45 நாட்கள் வரை உயர்த்தப்பட்டது. தற்போது கேஸ் சிலிண்டர் விநியோக காத்திருப்பு காலம் ஐந்து நாட்களுக்கும் குறைவாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஓடிபியை அடிப்படையாக வைத்து சிலிண்டர் விநியோகம் தற்காலிக அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. இனி இது நிரந்தரமாக மாற்றப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர், ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் சோதனையை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுவரை வாடிக்கையாளர்கள் அடையாளத்தை உறுதி செய்யாவிட்டால் அவர்களுக்கு இ-கேஒய்சி அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. ஏற்கனவே பயோமெட்ரிக் உறுதி செய்தவர்கள் மீண்டும் அதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், உஜ்வாலா திட்டப் பயனாளர்கள் மட்டும் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் பயோமெட்ரிக் உறுதி செய்வது அவசியம். சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி விரைவில் குழாய் மூலம் எரிவாயு விநியோகத்தை உருவாக்க மத்திய அரசு முயன்று வருகிறது. அவ்வாறு குழாய் மூலம் எரிவாயு சேவை பெறுவோர் சிலிண்டர்களை திரும்ப அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. போர் தொடங்கியதிலிருந்து வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் சீராக இருக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்