Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி பகுதியில் நவீன திடக்கழிவு மேலாண்மை திட்டம்…

மேயர் மு.அன்பழகன் தகவல்...

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் இன்று a9 03.10.2023)  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா, ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், துர்காதேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் துணை ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் மேயர் மு.அன்பழகன் பேசுகையில்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்த செயல் விளக்கத்தை பார்வையிட்டோம். அதுபோன்று திருச்சி மாநகராட்சியிலும் பணிகளை செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம். இது தொடர்பாக நகர்ப்புற அமைச்சரிடம் ஆலோசனை பெற்று திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிப்பது, திடக்கழிவு மேலாண்மை குறித்து திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசிடம் ஆலோசனை பெற இருக்கிறோம் என்றார். பின்னர் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

முத்துசெல்வம் (திமுக ): சுதந்திர தினத்தன்று சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த முறை மேயர், கமிஷனர் இல்லாததால் நிகழ்ச்சி நடைபெறவில்லை. எப்போது இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

மேயர்:- விரைவில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

சுரேஷ் (கம்யூனிஸ்ட்) :- இத்தாலியில் பழைய துணிகளை கொண்டு ஆடை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அது போல் திருச்சி மாநகராட்சி சார்பில் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும்.

ரெக்ஸ் (காங்). -சந்திராயன்- 3 நிலவில் வெற்றிகரமாக இறக்கியதில் முக்கிய பங்களித்த தமிழகத்தை சார்ந்த 9 இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்த முதலமைச்சருக்கு நன்றி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஜவகர் (காங்) :- திருவரங்கத்தில் அடிமனை பிரச்சனை காரணமாக பொதுமக்களுக்கு
மாநகராட்சி சார்பில் வரி போட முடியவில்லை. இதனால் மாநகராட்சிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில்நாதன் (அமமுக):-சென்ற கூட்டத்தில் இது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறினீர்கள்.என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள்.

மேயர் :- இது தொடர்பாக கமிஷனரிடம் பேசி தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாநகராட்சி பகுதியில் மாடுகளை பிடிப்பதில் ஒப்பந்தக்காரர் கடுமையாக நடந்து கொள்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் காஜாமலை விஜி, முத்துசெல்வம், ராமதாஸ் உள்ளிட்டோர் கடுமையாக பேசினார்கள்.

மேயர்:- இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாடுபிடிக்கும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அரவிந்தன்(அதிமுக) :- திருச்சி மேலப்புதூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் வார்டு குறைகளை எடுத்துக் கூறினார்கள்.பிறகு நடைபெற்ற அவசரக் கூட்டத்தில்
திருச்சி மாநகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்கு ( பேஸ்-4) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ரூ.221.39 கோடிக்கு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். திருச்சி மாநகராட்சி வளாகத்தில் புதிதாக கூட்டரங்கு கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதற்காக ரூ.41.37 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிதாக கலைஞர் நூற்றாண்டு கட்டிடம் அமைப்பதற்கு தமிழ்நாடு நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் அறிவுறுத்தலின்படி, ஒப்பந்தப்புள்ளி கூறுவதற்கு மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. மேலும் , பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்