பச்சை சிக்னல் விளக்கை சட்டையால் மறைத்து ரயிலை நிறுத்தி பெண்ணிடம் கொள்ளை… “பலே” கில்லாடியை தட்டி தூக்கியது போலீஸ்!
சென்னை அருகே, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நூதன முறையில் நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 15ம் தேதி சென்னை காட்டாங்குளத்தூர்-பொத்தேரி ஆகிய ரயில் தடத்திற்கு இடையே சிக்னல் கோளாறு காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென்று நிறுத்தப்பட்டது. அதேபோல அந்த வழியில் வந்த மற்றொரு விரைவு ரயிலும் சிக்னல் கோளாறு காரணமாக மெதுவாக இயக்கப்பட்டது. நெல்லை விரைவு ரயில் நின்ற நேரத்தில் அதில் பயணித்த ஒரு பெண்ணிடம் ஒருவர் நகையை பறித்ததாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பகுதியில் உள்ள ரயில் சிக்னல்களில் பச்சை சிக்னல் விளக்கை மட்டும் நூதனமான முறையில் சட்டை துணியால் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. திட்டமிட்டு ரயில் சிக்னல்களை மறைத்து ரயிலை நிறுத்தி பெண்ணிடம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக குமரேசன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டி வந்த குமரேசன், இரவு நேரங்களில் இதுபோல ரயில் சிக்னல்களை நூதன முறையில் சட்டை துணியால் மறைத்து நிற்கும் ரயில்களில் வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து குமரேசனை கைது செய்தனர். இதுபோல அவர் எத்தனை பேரிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.