Rock Fort Times
Online News

திருச்சி சமயபுரம் கோவிலுக்கு தாயுடன் வந்த குழந்தை கடத்தல்- 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்…!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நெடுவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபு. இவரது மனைவி கௌதமி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒன்னே முக்கால் வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கௌதமி மற்றும் அவரது பெரியம்மா முத்துலட்சுமி ஆகியோர் மன்னார்குடியில் இருந்து சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள ஆற்றில் கௌதமி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது முத்துலட்சுமியிடம் இருந்த குழந்தை திடீரென மாயமானது.

இதனால், பதற்றம் அடைந்த அவர்கள் இதுகுறித்து அங்கு கடை வைத்துள்ளவர்களிடம் கேட்டனர். அப்போது ஒரு பெண், குழந்தையை தூக்கிச் சென்றதாக தெரிவித்துள்ளனர். பின்னர், குழந்தையை அந்த பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் கௌதமி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடினர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது ஒரு பெண், அந்த குழந்தையை தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது. அதில், பதிவான பெண்ணின் முகத்தோற்றத்தை வைத்து போலீசார் கோயில் முழுவதும் சல்லடை போட்டு தேடினர். போலீசாரின் தேடுதல் வேட்டையில் கடத்தப்பட்ட குழந்தை இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில் அருகே இருந்தது தெரியவந்தது. பின்னர், குழந்தையுடன் அந்த பெண்ணை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தையை கடத்திய அந்தப் பெண் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை துளசியாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த 50 வயதான நீலாவதி என தெரியவந்தது. பின்னர் நீலாவதி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அந்த குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தை கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு மீட்டெடுத்த சமயபுரம் போலீசாரை குழந்தையின் தாயும்,அப்பகுதி மக்களும் வெகுவாக பாராட்டினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்