Rock Fort Times
Online News

தங்கத்தை இனி பார்க்கத்தான் முடியும்-வாங்க முடியாது போல…- இல்லத்தரசிகள் கவலை…!

இந்தியாவில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம் தான் பிரதான சேமிப்பாக இருந்து வருகிறது. மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் குறிப்பிட்ட ஒரு தொகையை தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதேபோல தங்கத்தின் மீதான முதலீடு காரணமாக தேவை அதிகரித்து வருகிறது. உள்ளூர் சந்தையிலும், வெளிச்சந்தையிலும் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு(2025) தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை முயல் வேகத்தில் ஏறுவதும், ஆமை வேகத்தில் இறங்குவதுமாக இருந்து வருகிறது. அந்தவகையில் இந்த மாதம்( ஏப்ரல்) தங்கம் விலை உச்சத்தை தொட்டு இருக்கிறது. கடந்த 12-ந் தேதி ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. அதனைத்தொடர்ந்து 14-ந் தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.120-ம், அதற்கு மறுநாள் பவுனுக்கு ரூ.280-ம் குறைந்து மீண்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.70 ஆயிரத்துக்கு கீழ் வந்து சற்று ஆறுதலை கொடுத்தது. இந்தநிலையில் நேற்று தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்தது.

இன்றும்(17-04-2025) தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில், ஆபரண தங்கம் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து 71,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.105 உயர்ந்து ரூ.8,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளி விலை எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,000க்கும் மேல் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என நகை வணிகர்கள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகள் சிலர் கூறுகையில், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் 80 ஆயிரம், 90 ஆயிரம் ரூ.ஒரு லட்சம் வரை சென்று விடக்கூடும். இதனால், முழுக்க முழுக்க பாதிக்கப்படுவது பெண் குழந்தைகளை பெற்றவர்கள் தான். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் பெண்களால் இனி தங்கத்தை பார்க்கத்தான் முடியும், வாங்க முடியாது. தங்கம் மீதான விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்