Rock Fort Times
Online News

இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் ஆதி மாரியம்மன் கோவில் உள்ளது. சமயபுரத்தில் மாரியம்மன் எழுந்தருளுவதற்கு முன்பு இனாம் சமயபுரம் கோவிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால், அங்குள்ள கோவில் ஆதி மாரியம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மீன லக்னத்தில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா இன்று(11-02-2024) தொடங்கியது. இதனை ஒட்டி காலையில் கோவில் நிர்வாகத்தின் சார்பாக கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பூத்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதி வழியாக கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து ஆதி மாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பூக்களை சாற்றி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சமயபுரம், மருதூர், மாகாளிகுடி, வி.துறையூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தட்டுகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். வருகிற 18 ந்தேதி 2 வது வார பூச்சொரிதல் விழாவும், 25 ந்தேதி 3 வது வார பூச்சொரிதல் விழாவும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான மாசிமாத தேரோட்ட விழா வருகிற மார்ச் 3 ந்தேதி நடைபெற உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்