Rock Fort Times
Online News

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிதி உதவி வழங்க வேண்டும்- திருச்சியில் திருமாவளவன் பேட்டி…!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறது. ஏற்கனவே, 370-வது சட்டப்பிரிவை நீக்கினார்கள். சிஏஏ சட்டத்தை கொண்டு வந்தார்கள். இதெல்லாம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இந்த ஆபத்தை தடுக்க வேண்டும். அம்பேத்கரின் சிந்தனையை, அவர் உருவாக்கிய அரசமைப்பு சட்டத்தை சிதைக்கும் வகையில் பா.ஜ.க.அரசு செயல்படுகிறது. இதை சுட்டிக்காட்டி நான் நாடாளுமன்றத்தில் பேச முற்பட்டபோது எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிதி உதவி வழங்க வேண்டும். பகுதி, பகுதியாக தேர்தல் நடத்தவே தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்தப்படும் சுமை. மாநில கட்சிகளே இருக்க கூடாது என்கிற உள்நோக்கத்தில் தான் இதை கொண்டு வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் யாரும் கேள்வி கேட்க முடியாது, அப்படி ஒரு நிலையை தான் கொண்டுவர பார்க்கிறார்கள். இது ஜனநாயக அரசமைப்பு சட்டத்துக்கு மிகவும் ஆபத்தானது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காதது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்து விட்டேன். என்னை யாரும் அழுத்தம் கொடுத்து இணங்க வைக்க முடியாது. அமைச்சர் எ.வ. வேலுவை நான் அடிக்கடி சந்திப்பேன். எல்லா நேரங்களிலும் முதலமைச்சரை சந்திக்க முடியாது. வாய்ப்பு கிடைக்கும்போது மூத்த அமைச்சர்களை சந்திப்பேன்.

ஆதவ்அர்ஜுன் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய சூழலில் இதுபோன்ற முரண்பாடான கருத்தை கூறுவது தவறு. அவர் அப்படி பேசக்கூடாது. ஆறு மாதத்திற்குப் பின்பு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அவர் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வேறு ஒரு செயல் திட்டம் இருப்பதால்தான் இதுபோன்ற கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார் என்பதை உணர முடிகிறது. ஆதவ் அர்ஜுன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது கண் துடைப்பு அல்ல, எங்கள் கட்சியின் நடைமுறையின் அடிப்படையில் தான் நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்