Rock Fort Times
Online News

திருச்சி கலெக்ட்ரேட் பி.ஆர்.ஓ பாலசுப்பிரமணியனின் சர்வாதிகாரம் !- தமிழ்நாடு முதல்வரின் உறவினர் எனக்கூறி செய்தியாளர்களுக்கு பல்வேறு வகைகளில் மறைமுக மிரட்டல் !

தமிழக அரசின் திட்டங்களையும், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளையும் உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய மிக முக்கிய பொறுப்பு, செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு உண்டு. மிகவும் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டிய பொறுப்பு மற்றும் கண்ணியம் மிகுந்தது இப்பணி. ஆனால், என்னை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது. என்னை கண்டால் ஒட்டுமொத்த உயர் அதிகாரிகளும் பயப்படுவார்கள் என ஊரையே மிரட்டும் அளவுக்கு திருச்சி மாவட்ட செய்தி மக்கள்தொடர்புத்துறையின் உதவி இயக்குனரான பாலசுப்பிரமணியனின் செயல்பாடுகள் உள்ளது. அவரது அஜாக்கிரதையான நடவடிக்கைகளால், மாவட்ட செய்தித்துறை நிர்வாகமே சந்திசிரிக்கிறது. திருச்சி மாவட்டத்திற்கு இவர் பணிமாறுதலாகி வந்த, கடந்த இரண்டாண்டுகளில் ஏகப்பட்ட நிர்வாக குளறுபடிகள் அரங்கேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உண்மையென்று மெய்ப்பிக்கும் வகையில் நேற்று முன்தினம்
( பிப்.22 – சனிக்கிழமை ) திமுக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிற இந்த சூழலில், திருச்சியில் நடந்த தமிழக அரசின் நிகழ்ச்சி ஒன்றின் காணொளி காட்சியில் முன்னாள் அ.இ.அதிமுக முதல்வர்களான ஜெ.ஜெயலலிதா மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் படங்கள் தவறுதலாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த மாபெரும் தவறை சுட்டிக்காட்டி தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் இதனை செய்தியாக்கி வெளியிட்டார். இதனை பார்த்து டென்ஷனின் உச்சிக்கே போன, திருச்சி கலெக்ட்ரேட் பி.ஆர்.ஓ & ஏடி பாலசுப்பிரமணியம், பத்திரிகையாளர்களுக்கு செய்திகள் பகிரப்படும் கலெக்ட்ரேட் வாட்ஸ் ஆஃப் குழுவில் இருந்து, தவறை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்ட நிருபரின் செல்போன் எண்ணை மட்டும், சர்வாதிகாரத்துடன் நீக்கினார். இது செய்தியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி இ.பி ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு வைகவுண்டஸ் கோஷன் பெண்கள் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட 6 புதிய வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ( பிப்.22 ) காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இது தொடர்பான நேரலை காட்சிகள், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் ஒளிபரப்பப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்திலும், எல்.இ.டி டிவி மூலம் நிகழ்ச்சி காட்சிப்படுத்தப்பட்டது.

அந்த நேரலையில் தான் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் தப்பும்,தவறுமாக வெளியானது. இது நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல் கட்சியினர், ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தவறை சுட்டிக்காட்டி தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டார். இதைப் பொறுக்க இயலாமல்தான் திருச்சி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரான பாலசுப்பிரமணியன், அரசு சார்ந்த செய்திகள் பகிரப்படும் வாட்ஸ் ஆஃப் குழுவில் இருந்து சம்பந்தப்பட்ட செய்தியாளரின் செல்போன் எண்ணை மட்டும் சர்வாதிகாரமாக நீக்கியுள்ளார். தமிழ்நாடு முதல்அமைச்சர் சம்மந்தப்பட்ட அரசு விழாவில் நடந்த இந்த இமாலய தவறுக்கு யார் பொறுப்பு ? அதிமுக ஆட்சியில் இதுபோன்று அசால்ட்டாக செயல்பட்ட பிறகு, சம்மந்தப்பட்ட அதிகாரியால் இப்படி ஹாயாக இருக்க முடியுமா ? தங்களுக்கு ஆதரவாக மட்டுமே செய்தி வெளியிட வேண்டும். தவறை சுட்டிக்காட்டினால் வாட்ஸ்அப் குழுவில் இருந்து இப்படித்தான் வெளியேற்றப்படுவீர்கள் என செய்தியாளர்களை மிரட்டும் ஏடி- பி.ஆர்.ஓ. பாலசுப்பிரமணியனின் இத்தகைய சர்வாதிகாரப்போக்கு செய்தியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் தனிப்பட்ட வெறுப்புகளை காட்ட, செய்திசார்ந்த வாட்ஸ் ஆஃப் குரூப் ஒன்றும், ஏடி- பி.ஆர்.ஓ பாலசுப்பிரமணியனின் குடும்ப சொத்துஅல்ல. இன்று அட்மினாக இருக்கும் பாலசுப்பிரமணியன் நாளையே சஸ்பெண்ட்டோ, டிஸ்மிஸ்சோ, செய்யப்பட்டால், அந்த அட்மின் பொறுப்பிற்கு வேறொரு அதிகாரி செயல்பாட்டில் இருப்பார். எதற்கெடுத்தாலும் நான் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் உறவினர் என பாலசுப்பிரமணியன் விடும் ஊழை உதார்கள் எல்லாம் அவருக்கு கீழ் வேலைபார்க்கும் அலுவலர்களிடம் வேண்டுமானால் எடுபடலாம். நேர்மையான, நெஞ்சுரம் கொண்ட செய்தியாளர்களிடம் இவர் காட்டும் சீன் பலிக்காது. திருச்சி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் மீதும், மாவட்ட அலுவலர் பாலசுப்ரமணியன் மீதும் ஏற்கெனவே ஏகப்பட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இனியும் இதுபோன்ற சர்வாதிகாரப்போக்கில் செயல்படுவதை திருச்சி மாவட்ட மக்கள்தொடர்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் நிறுத்திக்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தில் சுறுசுப்பாக செயல்பட்டு வரும் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ் இவ்விவகாரத்தில் தலையிட்டு முறையான விசாரணை நடத்தி, ஏடி- பிஆர்ஓ பாலசுப்பிரமணியனை அழைத்து கண்டிக்க வேண்டும். மகாராஜா மனபான்மையுடன் செயல்படும் பி.ஆர்.ஓ தனது சர்வாதிகாரத்தனத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்பதே நடுநிலை செய்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்