திருச்சி மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விரிவான ஏற்பாடுகள்- கலெக்டர் பிரதீப் குமார்…!
தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் மார்ச் தொடங்க இருக்கிறது. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை பிளஸ் -1, பிளஸ்-2 பொதுத்தேர்வை 65 ஆயிரத்து 426 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலெக்டர் மா.பிரதீப்குமார் கூறியதாவது:- இந்தாண்டுக்கான மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடைபெறுகிறது. மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை பிளஸ்- 2 மாணவர்களுக்கும், மார்ச் 5-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை பிளஸ்- 1 மாணவர்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளிகள் என 258 பள்ளிகளைச் சேர்ந்த 65 ஆயிரத்து 426 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் வசதிக்காக 131 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. மாவட்ட அளவில் 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 4 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தேர்வை ஒருங்கிணைக்க பள்ளிக் கல்வித்துறை, மின்வாரியம், போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, காவல்துறை என அனைத்து துறையினரும் அவரவருக்கான பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
*
Comments are closed.