திருச்சி அருகே பரபரப்பு:- தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை முயற்சி…!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, கட்டக்குடி பகுதியை சேர்ந்த தரணிதரன்( வயது 18) என்ற மாணவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகில் உள்ள கே.ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் விடுதியில் தங்கி சிவில் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று (மார்ச் 14) வழக்கம்போல அந்த மாணவர் கல்லூரிக்கு சென்றார். அப்போது கணினி பேராசிரியை டேட்டா எண்ட்ரி குறித்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் இருந்த மாணவர் ஒருவர் தவறாக டேட்டா எண்ட்ரி செய்ததாகவும், அதனை கவனித்த பேராசிரியை அந்த மாணவனை கண்டித்தபோது அதனை தரணிதரன் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பேராசிரியை தன்னை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ எடுப்பதாக எண்ணி கடுமையான வார்த்தைகளால் தரணிதரனை திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது தரணிதரன், பேராசிரியை இடம் மன்னிப்பு கேட்டும் அதனை ஏற்க மறுத்த பேராசிரியை அந்த மாணவனின் செல்போன் மற்றும் கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றை பறித்துக் கொண்டு கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் மனமுடைந்த தரணிதரன் திடீரென்று கல்லூரியின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில், உடலில் பலத்த காயம் அடைந்த மாணவனை சக மாணவர்கள் மீட்டு இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாணவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் தரணிதரன் வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் மாணவனின் தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கல்லூரிக்கு விரைந்து வந்த மாணவனின் தாயார், தனது மகனை உயர் சிகிச்சைக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதை அடுத்து மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தரணிதரன் தாயார் அளித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.