Rock Fort Times
Online News

அம்மா உணவகங்களில் சுவையான, தரமான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு…!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகங்கள் கொண்டு வரப்பட்டன. இங்கு ஏழை, எளிய மக்கள் பசியாற குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. ஜெயலலிதா மறைந்த பிறகும், திமுக ஆட்சி காலத்திலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்துள்ளது. இந்தநிலையில் அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக இந்த உணவகங்களில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார். இந்த மறுசீரமைப்பிற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்