Rock Fort Times
Online News

திருச்சி, எ.புதூரில் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ‘சர்ச்’ சுற்றுச்சுவர் இடிப்பு…!

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் இல.கண்ணன். திருச்சி மாவட்ட பாஜக முன்னாள் தலைவரான இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள சர்ச்சுக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த வழக்கில், எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கார்மெல் சர்ச் மற்றும் இறையியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த சர்ச்சின் சுற்றுச்சுவர் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. ஆகவே, ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, நீர்நிலை ஆக்கிரமிக்கப்பட்டது உறுதியானால் 8 வாரத்துக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த அவகாசம் கடந்த ஏப்ரல் 23ம் தேதியுடன் முடிந்தும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இல.கண்ணன் கடிதம் அனுப்பி இருந்தார். இந்தநிலையில் சர்ச் நிர்வாகமே சுற்றுச்சுவரை அகற்றிக் கொண்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தினை திருச்சி,
அரியாறு வடிநில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், திருச்சி மேற்கு வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு உறுதிப்படுத்தினர். இதுகுறித்து இல.கண்ணன் கூறுகையில், நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்