Rock Fort Times
Online News

கேரளாவில் பேருந்து மீது கார் மோதல்: புதுமண தம்பதி உட்பட 4 பேர் பலி…!

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த நிகில், அனு ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு மலேசியா சென்ற தம்பதியினர், அங்கிருந்து இன்று(15-12-2024) அதிகாலை திருவனந்தபுரம் திரும்பினர். புதுமண தம்பதியை உறவினர்கள் பிஜு ஜார்ஜ், மத்தாய் ஆகியோர் காரில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். பத்தனம்திட்டாவில் கோநி என்ற இடத்தில் கார் வந்தபோது எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுமண தம்பதி நிகில், அனு மற்றும் பிஜு ஜார்ஜ், மத்தாய் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காருக்குள் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் புதுமண தம்பதி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்