திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(12-05-2024) மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான துரை வைகோ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சிசிடிவி காட்சிகள் மூலம் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சிசிடிவி பிரச்சனைகள் இல்லை. பிரதமர் என்ற பதவிக்கு ஏற்றார் போல மோடி பேசவில்லை. பிரிவினையை உண்டுப்படுத்தும் நோக்கில், ஜாதி மதங்களை வைத்து வாக்கு சேகரித்து வருகிறார். இதுவரை இந்திய வரலாற்றில் இப்படி ஒரு பிரச்சாரத்தை யாரும் மேற்கொண்டதில்லை. இப்படி பேச கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை கூறவில்லை. பாஜகவினர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சிறுபான்மையினருக்கு மட்டும் சாதகமாக இருப்பது போல பேசி வருகின்றனர். இது பாஜகவினரின் தோல்வி பயத்தை காட்டுகிறது. இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். பிரதமர் மோடிக்கு வயதாகி விட்டது பிரதமர் மோடிக்கு பிறகு அமித்ஷா அந்த கட்சிக்கு தலைமை ஏற்பார். ஆனால், இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது நீதிக்கு கிடைத்த வெற்றி. இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என கூறினார்.

Comments are closed.