Rock Fort Times
Online News

ஆதிதிராவிடர் என போலிச் சான்றிதழ் கொடுத்து வக்கீலுக்கு படித்தவர் கைது….

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் ரஜினி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், பெருங்குடி கல்லுக்குடை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மணிகண்டன்(43) என்பவர் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும், வழக்கறிஞர் படிப்பிற்காக ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது போன்று போலியானச் சான்றிதழைச் சமர்ப்பித்து வழக்கறிஞர் படிப்பை முடித்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதாகவும், போலிச் சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற ரமேஷ் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார். இப்புகாரின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம், விசாரணை நடத்துமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், வழக்கறிஞர் ரமேஷ் மணிகண்டன் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என சான்றிதழ் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அவரது சாதிச்சான்றிதழை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் வருவாய்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையில் பேரில், போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து ஆதிதிராவிடர் சாதி சான்றிதழ் பெற்று அரசை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட ரமேஷ் மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீஸார், வழக்கறிஞர் ரமேஷ் மணிகண்டன் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்