தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளை வீழ்த்தி தவெக ஆட்சியைப் பிடித்தது. திமுக இரண்டாவது இடத்தை பிடித்தது. 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாமல் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் அதிமுகவுக்குள் பல குழப்பங்கள் நீடித்து வருகிறது. இந்த சூழலில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கிரீன்வேஸ் சாலை அரசு பங்களாவை எடப்பாடி பழனிசாமி காலி செய்துள்ளார். கடந்த 2011ம் முதல் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில், அமைச்சராகவும், முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராக வசித்து வந்தார். இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்தார். இதனால், அரசு பங்களாவில் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அரசு பங்களாவை காலி செய்துவிட்டு அதிமுக தலைமையகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் உள்ள வீட்டில் இன்று (29-05-2026) பால் காய்ச்சி குடியேறினார். 15 ஆண்டுகளாக கிரீன்வேஸ் சாலை வீட்டில் வசித்து வந்த எடப்பாடி பழனிசாமி, இன்று அந்த வீட்டை காலி செய்துள்ளார்.

Comments are closed.