தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் கொளுத்தி வருகிறது. அதுவும் திருச்சியில் வெயில் கடுமையாக உள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகரின் பரப்பளவில் பாதியைக் காட்டிலும் அதிகமான இடங்கள் கடுமையான வெப்ப அலைகளாலும், அதன் விளைவாக ஏற்படும் பொதுச் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளாலும் மக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக தமிழக அரசு நடத்திய புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘நகர்ப்புற வெப்பத் தீவு மதிப்பீடு மற்றும் நகர்ப்புற குளிர்ச்சிக்கான உத்திகள்’ என்ற தலைப்பில், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் மற்றும் தெற்காசியாவிற்கான உள்ளூர் சுற்றுச்சூழல் முன் முயற்சிகளுக்கான சர்வதேச கவுன்சில் இணைந்து சென்னை, கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டன. திருச்சி மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் நிலப்பரப்பு வெப்பநிலை, நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு மற்றும் கட்டிடங்களின் அடர்த்தி ஆகிய காரணிகளைக் கொண்டு ‘வெப்ப அபாயக் குறியீடு’ தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சியின் 16 வார்டுகள் ‘மிக அதிக ஆபத்தானவை’ என்றும், 20 வார்டுகள் ‘அதிக ஆபத்தானவை’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது, நகரின் 65 வார்டுகளில் 36 வார்டுகள் வெப்ப அழுத்தத்திற்கு (Heat Stress) ஆளாகும் நிலையில் உள்ளன. இந்த வெப்பப் பாதிப்பைக் குறைக்க நகர்ப்புறப் பசுமையாக்குதல் மற்றும் குளிர்ச்சித் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, பசுமைப் போர்வையை இழந்து மிக வேகமாக நகரமயமாக்கப்பட்டதே இந்த நிலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. நிலப்பயன்பாட்டு ஆய்வின்படி, 2024-ம் ஆண்டு நிலவரப்படி திருச்சியின் மொத்தப் பரப்பளவில் வெறும் 3 சதவீதம் மட்டுமே பசுமைப் போர்வையாக உள்ளது. அதே சமயம், கட்டிடங்கள் மற்றும் கான்கிரீட் அமைப்புகள் 59 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன. தாவரங்களின் அடர்த்தியைக் கண்டறியும் ஆய்வில், ஸ்ரீரங்கம் (வார்டு 1), ஆனந்தா அவென்யூ (வார்டு 18) மற்றும் காமராஜ் நகர் (வார்டு 37) ஆகிய மூன்று வார்டுகளில் மட்டுமே ஓரளவிற்குப் பசுமையான தோட்டங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, மலைக்கோட்டை (வார்டு 14) மற்றும் பெரிய கடை வீதி (வார்டு 19) போன்ற பகுதிகளில் கட்டிடங்கள் அதிகமிருந்தும் பசுமைப் போர்வை மிகக் குறைவாக உள்ளது. அரியமங்கலம், பால்பண்ணை சந்திப்பு மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகள் மிக அதிகமான நிலப்பரப்பு வெப்பநிலையைக் கொண்டுள்ளன. நகர்ப்புற வெப்பத் தீவு என்பது சுற்றியுள்ள கிராமப்புறங்களை விட ஒரு குறிப்பிட்ட நகர்ப்புறம் மட்டும் அதிக வெப்பத்துடன் இருப்பதாகும். இத்தகைய பாதிப்பு பஞ்சப்பூர், திருச்சி விமான நிலையம் மற்றும் கருமண்டபம் ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ளது. மக்கள் வசிப்பிடங்களில் உள்ள காலி இடங்களில் செடிகள் வளர்ப்பதற்குப் பதிலாக, தரைத்தளங்களைப் பேவர் பிளாக்குகள் அல்லது கான்கிரீட் கொண்டு மூடுவது இந்த வெப்ப அபாயத்தை மேலும் அதிகரிப்பதாகக் கட்டடக்கலை வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள குறைந்தபட்சப் பசுமைப் பகுதிகளும் கூட நகரின் கல்வி நிறுவன வளாகங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. எனவே, பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களிலும் பசுமையை அதிகரிக்க முன்வர வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வெப்பச் சவாலை எதிர்கொள்ள சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் ‘குளிர்ச்சி மேற்கூரைகள்’ சமுதாயப் பூங்காக்கள், குடிசைப் பகுதிகளில் காற்றோட்ட வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பொதுக் குளங்களைச் சீரமைத்தல் போன்ற வார்டு வாரியான தீர்வுகளை இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் தரப்பில், நகருக்குள் உள்ள காலி இடங்களைக் கண்டறிந்து ‘மியாவாக்கி’ முறையில் குறுங்காடுகளை உருவாக்கிப் பசுமைப் போர்வையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.