சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. தலைவர் எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.14) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுகுறித்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த எச்.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என்னை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். தான் விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் இரு தலைவர்களும் எதிரும், புதிருமாக இருந்தாலும் மருத்துவமனைக்கு நேரில் சென்று எச்.ராஜாவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தது அரசியல் கடந்த நேசமாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.