பெங்களூர் ஜலதர்சினி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (50). இவர் தனது குடும்பத்துடன் திருச்சி மாவட்டம், குணசீலம் பிரசன்ன வெங்கிடாஜலபதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். குணசீலம் வந்தடைந்ததும் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் அருகில் இருந்த காவிரி ஆற்றில் குளித்தனர். திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.காரில் இருந்த கை பையை மர்ம நபர்கள் யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை தனிப்பிரிவு போலீஸ் கார்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் பெரியமணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர் திருடிச்சென்ற கைப்பையில் 4 விலை உயர்ந்த செல்போன், நகை மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. மேலும் திருடுபோன செல்போனில் டிராக்கிங் டிவைஸ் செல்போன் செயலி இருந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அந்த செயலியை பயன்படுத்திய போலீசார் திருடுபோன செல்போன் ஒரு கிலோமீட்டர் சுற்றளவு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் வலைவீசி தேடினர். அப்போது காரில் இருந்து திருடப்பட்ட கை பையானது வாத்தலை காத்தான்கோவில் சுற்றுச் சுவர் அருகே கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதனைக் கைப்பற்றிய போலீசார் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். கைப்பையை பார்வையிட்ட உரிமையாளர்கள் செல்போன், நகை மற்றும் பணம் ஆகியவைகள் அனைத்தும் இருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுத்து துரிதமாக செயல்பட்டு போலீசாருக்கு சுரேஷ்குமாரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.