திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளரை அரிவாளால் வெட்டியதாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை…!
திருச்சி, தென்னூர் ஜாகிர் உசேன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (வயது 48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். இவரது மகன் பாகா. அஷ்ரப் அலிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது யுவாஸ், ஷேக், அஸ்ரப் உள்ளிட்ட சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாகாவை அந்த தரப்பினர் தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அறிந்த அஷ்ரப் அலி தனது 2 சகோதரர்கள் மற்றும் மகனின் நண்பர் ஆகியோருடன் தென்னூர் முகமது பூரா மசூதி பகுதிக்கு சென்று முகமது யுவாஸ் தரப்பினரை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த முகமது யுவாஸ் தரப்பினர் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவர்களை தாக்கினர். இதில் அஷ்ரப் அலி மற்றும் அவரது சகோதரர்கள் காதர், அப்பாஸ் ,பாகாவின் நண்பர் முகமது ஆசிப் ஆகிய நான்கு பேருக்கு தலை, காது, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அஷ்ரப் அலியின் வீடு புகுந்து வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
படுகாயம் அடைந்த 4 பேரும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அஷ்ரப் அலி கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமது யுவாஸ், ஷேக், அஸ்ரப் உள்ளிட்ட 10 பேர் மீது தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முகமது யுவாஸ் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.