பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை- திருச்சி மத்திய மண்டல போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜோஷி நிர்மல்குமார் …!
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க.ஜோஷி நிர்மல்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் தமிழக முதல்வர் ஆணைக்கேற்ப போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்திட அதிக முக்கியத்துவம் தரப்படும். கஞ்சா, குட்கா மற்றும் இதர போதைப் பொருட்களை கடத்துதல், பதுக்குதல், சட்ட விரோதமாக விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் இதுபோன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். பொதுமக்கள், காவல் நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அளிக்கும் புகார் மனுக்கள் மீது முறையாக விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கடத்தல், சட்டவிரோதமாக சாராய விற்பனை. லாட்டரி விற்பனை போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இணையதள மோசடிக் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சட்ட விரோத மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரௌடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று எச்சரித்துள்ளார்.
இவர் இதற்கு முன்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில் காவல்துறை தலைவராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றினார். மேலும், இவர் 2002-ம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராக திருப்பூர், ஓசூர், தர்மபுரி, பவானி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களிலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக சேலம் நகர பிரிவிலும், காவல் கண்காணிப்பாளராக கரூர், திருவண்ணாமலை, துணை ஆணையராக சென்னை சட்டம்- ஒழுங்கு மற்றும் போக்குவரத்து துறையிலும், இணை ஆணையராக சென்னை வடக்கு மண்டலம் காவல்துறை துணை தலைவராக நுண்ணறிவு பிரிவு, திண்டுக்கல் சரகத்திலும் பணியாற்றினார். காவல்துறை தலைவராக 2020-ம் ஆண்டில் பதவி உயர்வு பெற்று காவல் தலைமையகம், நிர்வாக துறை தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் மற்றும் குற்றப்புலனாய்வு துறையிலும் பணியாற்றியுள்ளார்.
Comments are closed.