Rock Fort Times
Online News

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள்: அறிவித்தது, தெற்கு ரயில்வே…!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ம் தேதி( செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வர். வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. இதனால் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல் டூ நாகர்கோவில்

* சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 12, 19ம் தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் ( எண் 06089) மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

* மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 13, 20ம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.  இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்றடையும்.

திருநெல்வேலி டூ தாம்பரம்

* திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 12, 19, 26ம் தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு சிறப்பு ரயில் ( எண் 06092) மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

* மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 13, 20, 27ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து (எண் 06091) பிற்பகல் 3-30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழகடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும்.

தாம்பரம் டூ கன்னியாகுமரி

* தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு ஜனவரி 13ம் தேதி இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06093) மறுநாள் பிற்பகல் 12:30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

* மறுமார்க்கமாக, இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 14ம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.  இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.

ராமநாதபுரம் டூ தாம்பரம்

* ராமநாதபுரத்தில் இருந்து ஜனவரி 10, 12, 17ம் தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு சிறப்பு ரயில் (ரயில் எண்- 06104) மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

* மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 11, 13, 18ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.

* இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும்.

தாம்பரம் டூ திருச்சி

* தாம்பரத்திலிருந்து ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19ம் தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படும் ஜன்சதாப்தி அதிவிரைவு ரயில் (ரயில் எண் 06191) இரவு 11:35 மணிக்கு திருச்சி சென்றடையும்.

* மறுமார்க்கமாக, இந்த ரயில் அதே நாட்களில் திருச்சியில் இருந்து காலை 5:30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்றடையும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஜனவரி 5ம் தேதி காலை 8 மணிக்கு துவங்குகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்