இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாக நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளோம். ”சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்கவில்லை என்றால் கூட நாங்கள் சாலையில் நின்று தொடர்ந்து பேசுவோம். எங்கள் குரல் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். உங்கள் செவியிலிருந்து நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் செவி வரை எங்கள் குரல் கேட்கும். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர முடியாத நிலையில் உள்ளது. இந்தியா உலகத்தில் எங்கும் இல்லாத வகையிலான ஒரு பன்முக அமைப்புகளை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மையைக் காக்க இடதுசாரிகள் தொடர்ந்து களமாடுவோம். குரல் எழுப்புவோம். இதுதான் தேசத்தின் தேவை. அதை உடைக்க பாஜக நினைப்பதால் பாஜகவை நாங்கள் எதிர்க்கிறோம். அதைத் தவிர பாஜகவின் மீது எங்களுக்கு என்ன பகை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் வெறுப்போ, பகையோ எங்களுக்கு கிடையாது. இந்த பன்முகத்தை சிதைக்கக் கூடாது என்பதற்காகத்தான் பாஜகவை எதிர்க்கிறோம். இந்த கொள்கையை ஏற்பவர்கள், தமிழக மக்களின் நலன், உழைப்பாளி மக்களின் நலன், எளிய மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் என்று எங்களுடன் இணைகின்ற அனைத்து ஜனநாயக சக்திகளுடன் நாங்கள் இணைவோம். டெல்லி செல்லும் விஜய், பிரதமருடன் ஆலோசித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்க வேண்டும். ஜனநாயகத்தின் மூன்றாம் தூணான பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும்” என்றார்.

Comments are closed.