கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்: மதுரையில் இருந்து சென்னை வரை பாஜக மகளிர் அணியினர் நீதிப்பேரணி- ஜனவரி 3ம் தேதி தொடங்குகின்றனர்…!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார விவகாரம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாம் தமிழர் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜயும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்துள்ளார். மேலும், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்து நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க., அரசைக் கண்டித்து மகளிர் அணி சார்பில் நீதிப்பேரணி நடத்தப்படும் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க., அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, பா.ஜ., மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது. ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது கவர்னரை சந்தித்து, மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Comments are closed.