ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9ம் நாளான நேற்று நம்பெருமாள் ரெங்கநாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் (கோரதம்) இன்று நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் காலை 9.30 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து பங்குனிதேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 10 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 10.45 மணிக்கு தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோபாலா நாராயணா என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து 2.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. நிலையை வந்தடைந்த தேரின் முன் பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாளை ஆளும்பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிகிறார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
