திருவெறும்பூரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வாலிபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி, திருவெறும்பூர் கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (28). இவர் சம்பவத்தன்று இரவு திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் பகுதியில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையை தாண்டி செல்ல முற்பட்ட போது, மின் கம்பத்தில் அவரது கை பட்டதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். தினேஷுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு தான் ஆகிறது. அவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். மேலும், தினேஷின் அண்ணன் தீனா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக உள்ளார். இந்தநிலையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தினேஷின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி தினேஷின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் துவாக்குடி அரசு மருத்துவமனை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால் திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக், திருச்சி, கரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், வழக்கறிஞர் கலைச்செல்வன், நிர்வாகிகள் குணா, நகராட்சி மன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டிஎஸ்பி இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.
Comments are closed.