தமிழக வெற்றிக்கழக மாநாடு: இடம் கொடுத்தவர்களுக்கு விருந்து ! விஜய்க்காக உயிர் கொடுத்தவர்களுக்கு ? – உரிமை குரல் எழுப்புகிறார் வக்கீல் கிஷோர்குமார்…!
மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு இடம் கொடுத்தவர்களை சென்னைக்கு நேரில் அழைத்து விருந்து கொடுத்து உபசரித்துள்ளார் விஜய். நல்ல விசயம் தான். ஏனெனில் விஜய் தனது அரசியலுக்கு முதல் அச்சாணியாக அமைந்த மாநாட்டிற்கு இடம் கொடுத்தவர்களை கௌரவித்துள்ளார். ஆனால், அதே வேளையில் விஜய்க்காக விஜய் ரசிகர் மன்ற காலம் தொட்டு அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த வரை இரவு-பகல் பாராமல் மாநாட்டிற்கு முதல் நாள் வரை கடுமையாக களப்பணியாற்றிய திருச்சியை சார்ந்த சகோதரர்கள் வழக்கறிஞர் வி.எல்.ஸ்ரீநிவாசன் மற்றும் உறையூர் கலை ஆகியோர் மாநாட்டிற்கு செல்லும் வழியில் மாநாட்டு தினத்தில் அகால மரணமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான செய்தி அனைத்து செய்தி சேனலிலும் ஒளிபரப்பானது. மேலும் விஜய் கவனத்திற்கும் இந்த தகவல் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், மாநாட்டில் சென்டிமென்டாக விஜய் தனது தொண்டர்களுக்கு இரங்கல் தெரிவிக்காமல் தவிர்த்தார் என்ற செய்தி வந்தது. இதனை தொடர்ந்து மறைந்த இரு சகோதரர்களின் குடும்பத்தினருக்கு விஜய் நேரில் இரங்கல் தெரிவிக்கவில்லை. மேலும், மேற்படி குடும்பத்தில் ஆணிவேராகயிருந்த இருவரின் குடும்பத்தினருக்கு நிதி வழங்க மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அன்றே விஜய்க்கு கோரிக்கை விடுத்திருந்தோம். விஜய் தனது ஒவ்வொரு மேடை பேச்சிலும் என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பர்கள், நண்பிகள் என ஆரம்பிப்பார். ஆனால் இந்த அலங்க வார்த்தைகள் எல்லாம் வெறும் மேடை பேச்சுகளுக்காக தான்_இவையெல்லாம் சினிமாவை போல அரசியலிலும் விஜய் பயன்படுத்தும் வெறும் வெற்று வார்த்தைகள் என இப்பொழுது தான் புரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.