Rock Fort Times
Online News

திருச்சி, அரியமங்கலத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகள் கைது-பரபரப்பு வாக்குமூலம்…!

திருச்சி, அரியமங்கலம் காமராஜர் நகர் பீடி காலனியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மனைவி சம்சாத்(55). அக்பர் அலி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு சிராஜ் என்ற மகனும், நிஷா என்ற மகளும் உள்ளனர்.  இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.  சிராஜ் கவரிங் நகை செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ஆயிஷா பேகம் (22) என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.  இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஆயிஷா பேகம் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இதற்காக மனநல ஆலோசகரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்  மாமியாருக்கும், மருமகளுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.  சில நேரங்களில்  ஆயிஷாபேகம், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்து விடுவார் என்றும், ஏற்கனவே சம்சாத்தை தலையணையால் முகத்தில் வைத்து அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமியார், மருமகள்  உட்பட குடும்பத்தினர் அனைவரும் ஒடுகம்பட்டி தர்காவிற்கு சென்று மருமகளுக்கு கையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று மாமியார், மருமகள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது தன்னுடைய கையில் இருக்கும் கயிறை கழட்டும்படி மாமியாரிடம் கேட்டு ஆயிஷா சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது கோபத்தில் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை  எடுத்து வந்து மாமியார் சம்சாத் இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.  இதில், சம்சாத்  ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தடுக்கச் சென்ற உறவினர் ரஹ்மத் நிஷா என்பவரும் காயம் அடைந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆயிஷா மயங்கி விழவே, அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  மேலும், சம்சாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த நிலையில் இன்று(26-10-2024) ஆயிஷா மீது போலீசார் வழக்கு பதிந்து கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.  இந்த கொலை தொடர்பாக போலீசார் கூறுகையில், மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே முதலில் இருந்தே பிடிக்கவில்லை. அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கொலையை மருமகள் ஆயிஷா பீவி திட்டமிட்டு செய்துள்ளார் என்றனர்.  பின்னர், இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார்  ஆயிஷாவை  கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இன்று மாலை சிறையில் அடைக்க உள்ளதாக தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்