திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன் படி கடந்த மாதம் மார்ச் 26 ஆம் தேதி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தாயுமானவர் சுவாமி (சிவபெருமான்), மட்டுவார் குழலம்மை சமேதராக தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திரு வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தனர். இதே போல ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் உபயதார்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் புறப்பாடு நடைபெறும். மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிகோவில் தெப்ப திருவிழாவில் முக்கிய விழாவான நேற்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. சுவாமி அம்பாள் மாலை புறப்பட்டு பிரம்ம தீர்த்த தெப்பக்குளத்தில் எழுந்தருளி தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் தெப்பம் ஐந்து முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்ற பக்தி கோசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர். தெப்பத் திருவிழாவின் நிறைவு நாளான இன்று சுவாமி தீர்த்தவாரி நிகழ்வுடன் நிறைவடைகிறது. திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் தெப்ப திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த தெப்ப திருவிழாவிற்கான முன் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் மலைக்கோட்டை கோவில் ஊழியர்கள், பணியாளர்கள் செய்து வந்தனர்.
