பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அவற்றுள் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 20 நாட்கள் இந்த விழா நடைபெறும். பகல் பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் கோவில் இரண்டாம் பிரகாரம் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுவார். ராப்பத்து உற்சவத்தின் போது நம்பெருமாள் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் (திருமாமணி) மண்டபத்தில் எழுந்தருளுவார். ராப்பத்து உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான வேடுபறி வைபவம் கோவில் நாலாம் பிரகாரத்தில் உள்ள மணல்வெளியில் நடைபெறும். வேடுபறி உற்சவத்தின்போது உற்சவர் நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மணல்வெளியில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளுவார். இதனையொட்டி ஆண்டுதோறும் கோவில் 4 மற்றும் 5ம் பிரகார மணல்வெளியில் உள்ள மணல் சலிக்கப்பட்டு கற்கள் அகற்றப்பட்டு, புதிய மணல் நிரப்படும். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி வருகிற டிசம்பர் 30ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குகிறது. பரமபதவாசல் திறப்பு ஜனவரி 10ந் தேதியும், வேடுபறி வைபவம் 17-ந்தேதேதியும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மணல் வெளியில் உள்ள மணல் சலிக்கப்பட்டு புதிய மணல் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed.